தஞ்சாவூர்: “தேர்தல் கூட்டணிக்காக நாம் யாரிடமும் சென்று பேச முடியாது; கூட்டணி என்று நம்மிடம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று தஞ்சையில் நடந்த ரகசிய கூட்டத்தில் விஜயகாந்த், தொண்டர்களை உற்சாகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு, திருவாரூர், நாகை ஒன்று, நாகை இரண்டு, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட் டை, கடலூர் உட்பட 16 மாவட்ட தே.மு.தி.க., மகளிரணி மற்றும் நிர்வாகிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டம், தஞ்சாவூர் சோழா திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.நிர்வாகிகள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை. இக்கூட்டத்தில், தலைவர் விஜயகாந்த் தனது தொண் டர்களை மிகவும் உற்சாகப்படுத்திப் பேசினார். கூட்டத்துக் குப் பின் நிர்வாகிகளுடன் இணைந்து நூற்றுக்கணக்கான போட்டோவுக்கு விஜயகாந்தும், அவரது மனைவியும் போஸ் கொடுத்து உற்சாகப்படுத்தினர்.
விஜயகாந்த் பேச்சு குறித்து, நிர்வாகிகளிடம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்:நாம் சட்டசபை, லோக்சபா தேர்தலை சந்தித்து விட்டோம். இந்த லோக்சபா தேர்தலில், நாம் எதிர்பார்த்த ஓட்டுகளையும், வெற்றியையும் பெற முடியவில்லை. நமது ஓட்டு வங்கியை அதிகரிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும். குறிப்பாக, கிராமங்கள், நகரங்களில் கட்சிக்கு அடித்தளமிட்டு வளர்க்க வேண்டும்.தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதிக பட்சமாக அடுத்த ஆண்டு வரலாம். கூட்டணிக்காக நாம் யாரிடமும் பேச முடியாது; நாம் முயற்சி செய்ய வேண்டும்.
தேர்தல் வரும் போது, கூட்டணி என்று நம்மிடம் வரும்போது அதை பார்த்துக் கொள்ளலாம். சட்டசபை தேர்தலுக்காக நம்மை நாம் இப்போதே தயார்படுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் நமது நிர்வாகிகளை குறை சொல்வதை விட்டு விட்டு, அனைவரும் ஒன் றிணைந்து மக்களிடம் சென்று கட்சியை வளர்க்க உழைக்க வேண்டும். அப்போது தான், சட்டசபை தேர்தலை நாம் எதிர்கொள்வது எளிதாகும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.